முகப்பு
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்து!

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானம் பற்றி...

Updated On : 12 மார்ச், 2026 at 11:07 AM
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தை நாளை (மார்ச் 13) மக்களவை அல்லது மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

விதிகளின்படி மக்களவையில் 100 எம்பிக்கள், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் தீர்மானத்தில் கையெழுத்திட்டால் அதனை முன்மொழியலாம் என்ற நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேலாக எம்பிக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்தில் இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டதாகவும், இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி எம்பிக்களும் இதில் பங்கெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிவது இதுவே முதல்முறையாகும்.

அலுவலக விவகாரங்களில் பாரபட்சமான நடத்தை, தேர்தல் மோசடி தொடர்பான விசாரணைகளை தடுப்பது, பெருமளவில் வாக்குரிமையை பறிப்பது போன்ற 7 காரணங்கள் அவரை நீக்குவதற்கு குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாஜகவிற்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுவதாகவும், நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மத்திய அரசிற்கு ஆதரவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன.

இதில், மேற்கு வங்கத்தில் பல உண்மையான வாக்காளர்களை நீக்குவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

சட்டப்படி தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான வழிமுறை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்குவதற்குச் சமமானது.

இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை போன்ற சிறப்பு பெரும்பான்மையால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

நீதிபதிகள் (விசாரணை) சட்டம் 1968-ன் படி, ஒரே நாளில் இரு அவைகளிலும் தீர்மானத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டால், இரு அவைகளிலும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அதற்கான குழு அமைக்கப்படாது.

தீர்மானம் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சபாநாயகர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் இணைந்து ஒரு குழு அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Reports emerged that 200 MPs have signed a resolution to remove CEC Gyanesh Kumar from office

முழு கட்டுரையைப் படிக்க →