எப்ஸ்டீனின் நண்பர் மத்திய அமைச்சர்! காங்கிரஸ் குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!
மக்களவையில் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தில் ராகுல் காந்தி தேவையற்றதைப் பேசுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தில் ராகுல் காந்தி தேவையற்றதைப் பேசுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து ராகுல் காந்தி பேசியதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "நாட்டில் நிலவும் மிக முக்கியமான எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியதை நாம் கண்டோம். நமது பெட்ரோலிய அமைச்சர் சமரசம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தீவிரமான கருத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.
அதை ஆதாரங்களுடன் குறிப்பிட விரும்புகிறார். மக்களுக்கு அதனைச் சொல்வார். ராகுல் உண்மையை வெளிப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, மக்களவையில் ராகுலின் பேச்சு குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "நாடாளுமன்றத்தின் அனைத்து விதிமுறைகளையும் எதிர்க்கட்சியினர் மீண்டும் மீறினர். அனைவரும் பேசுவதற்கான நியாயமான வாய்ப்பு வழங்கப்படும் என்று அவைத்தலைவர் கூறினார்.
எல்பிஜி தட்டுப்பாடு குறித்து விவாதிக்க ராகுல் காந்தி நேரம் கேட்டார். அதுபோலவே அவருக்கு நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும். அவர் அதில் கவனம் செலுத்தாமல் தேவையற்றதைப் பேசினார்" என்று தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஜக்தீப் சிங் புரிக்கு தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டினார். "ஒரு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புதான் அதன் அடித்தளம். நாம் யாரிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம், யாரிடமிருந்து எரிவாயு வாங்குகிறோம், ரஷியாவிடமிருந்து வாங்கலாமா வேண்டாமா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறது.
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்க வேறொரு நாடோ வேறு நாட்டின் அதிபரோ ஏன் அனுமதிக்க வேண்டும்?
இதற்கான புதிரை நான் கண்டுபிடித்து விட்டேன். இந்தப் புதிர் சமரசம் பற்றியது. இங்கு அமர்ந்திருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் எப்ஸ்டீனின் நண்பர் என்று அவரே கூறினார்" என்று ராகுல் தெரிவித்தார்.