ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!
ரூ.500 லஞ்சம் பெற்ற காவலரின் தண்டனை 36 ஆண்டுகளுக்குப் பின் உறுதிசெய்யப்பட்டது பற்றி...
ரூ.500 லஞ்சம் பெற்ற காவலரின் தண்டனையை 36 ஆண்டுகளுக்குப் பின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் ஜூன் 19, 1990 அன்று முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் வழக்கு விசாரணை ஒன்றில் ரூ. 500 லஞ்சம் பெற்றுள்ளார். அவர்மீது அங்குள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அடுத்த ஆண்டே மாவட்ட நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் குற்றவாளி என கடந்த 2006 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவர் மேல்முறையீடு செய்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்து வந்தார்.
அவர் கடந்த 2013 ஜனவரி முதல் ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், பி பி ராலே அடங்கிய அமர்வு கடந்த வெள்ளி (மார்ச் 13) அன்று விசாரித்தது.
பின்னர் வெளியான உத்தரவில், ”விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிசெய்ததில் எந்தப் பிழையும் இல்லை. குற்றவாளிக்கு தற்போது 75 வயதாகியுள்ளது. அவர் ஏற்கனவே இரு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
எனவே, மேற்கூறிய குற்றத்திற்கான தண்டனையை மாற்றியமைக்கிறோம்” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பொது பணியாளர் குற்றவியல் சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இதன்மூலம், ரூ. 500 லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 36 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு ஆண்டுக்கான சிறைத் தண்டனை உறுதியாகியுள்ளது.