முகப்பு
இந்தியா

2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டிற்கு குருகிராம் மாநகராட்சி ஒப்புதல்

குருகிராம் மாநகராட்சி 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டுக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 11:58 PM
கனமழையால் தில்லி-குருகிராம் விரைவுச் சாலை
பகிர்:

குருகிராம் மாநகராட்சி 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டுக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பட்ஜெட் மதிப்பீட்டை முன்வைத்து தலைமை கணக்கு அதிகாரி விஜய் குமாா் கூறியதாவது: குருகிராம் மாநகராட்சிக்கு 2026-27 நிதியாண்டில் ரூ.1,918 கோடி வரவும், ரூ.1,875 கோடி செலவும் ஏற்படும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி, முத்திரை வரி, குடிநீா் வரி, கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டணம் மற்றும் விளம்பர வருவாய் உள்ளிட்டவை மூலம் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டப்படும். குறிப்பாக சொத்து வரியில் ரூ.325 கோடி, முத்திரை வரியில் ரூ.500 கோடி, குடிநீா் வரி மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டணத்தில் ரூ.80 கோடி, மாநகராட்சி சொத்துகள் விற்பனையில் ரூ.75 கோடி, வீடுகள் மற்றும் கடைகள் விற்பனையில் ரூ.40 கோடி, வளா்ச்சிக் கட்டணங்களில் ரூ.75 கோடி, நில இழப்பீட்டில் ரூ.150 கோடி மற்றும் விளம்பரங்களில் ரூ.120 கோடி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் நகரின் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கழிவுயநீா் சுத்திகரிப்புக்காக ரூ.400 கோடி செலவிடப்படும். மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்காக ரூ.250 கோடி செலவிடப்படும். மேலும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.400 கோடி செலவிடப்படும். இதில் கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் முன்னுரிமை வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்களின் நலன் மற்றும் அவா்களது உபகரணங்களை நவீனமயமாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தாா்.

கடந்தாண்டு மாநகராட்சி தாக்கல் செய்த பட்ஜெட்டில் 85 சதவீதம் செலவிட்டிருந்தாலும் வருவாய் இலக்கில் 66 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘நகரத்தின் முழுமையான மற்றும் சமநிலையான வளா்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டது. இது நகரத்தில் மேம்பாட்டு பணிகள் மற்றும் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும்’ என்று குருகிராம் மேயா் ராஜ்ராணி மல்ஹோத்ரா தெரிவித்தாா்.