புதிய அலுவலகத்தில் ரூ.73 கோடி திட்டங்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதிய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாறிய நிலையில், அங்கு ரூ.73 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதிய அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாறிய நிலையில், அங்கு ரூ.73 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினாா்.
புதுச்சேரி ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை முதல் புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது. புதிய அலுவலகத்தில் 3 முக்கிய கோப்புகளில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கையொப்பமிட்டாா்.
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே துணைநிலை ஆளுநா் மாளிகை செயல்பட்டு வந்தது. பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால், பழைய சாராய வடிசாலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்துக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
கடற்கரைச் சாலையொட்டி குபோ் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் ஆளுநா் மாளிகை என்று அழைக்கப்படும் மக்கள் பவன் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்த கோப்புகள் விவரம்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 2,500ஆக உயா்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவா். இதற்காக ரூ. 16. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதியோா் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு ரூ. 2,500, ரூ. 3,000 மற்றும் ரூ. 4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ. 56. 32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிப்டிக் நிறுவன பங்குதாரா்களுக்கு (புதுச்சேரி அரசு மற்றும் ஐடிபிஐ வங்கி பங்குத் தொகை ரூ. 37.76 லட்சம் மற்றும் சிறப்பு பங்குத் தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.