ஏப். 1 முதல் விமான கட்டணம் உயர்வு? சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதில்!
விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) உயர்வால் ஏப். 1 முதல் விமான கட்டணம் உயரலாம்!
ஏப். 1 முதல் விமான கட்டணம் உயரலாம் என்பதைப் பற்றி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு சூசகமாக இன்று(மார்ச் 21) தெரிவித்தார்.
சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இன்று(மார்ச் 21) செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஏடிஎஃப் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம் நாள் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, அதன் தாக்கம் ஏப். 1 முதல் தெரிய வரும். ஆனால், நாங்கள்(அரசு) தொடர்ந்து விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடன் தொடர்பிலிருந்து வருகிறோம்.
அதில், முதலில் வருவதும் முக்கியமானதும் ஒன்றே, பாதுகாப்பான பயணம் வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிலும் குறிப்பாக, மத்திய கிழக்கில்.
விமான நிறுவனங்களிலும் அதன் செயல்பாடுகளிலும் ஏடிஎஃப் விலை உயர்வால் தாக்கம்; பொருளாதார தாக்கம் ஏற்படக்கூடும். விமான நிறுவனங்களிடமிருந்தும் கருத்துகேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, ஆலோசனைகளையும் நடத்தி வருகிறோம்.
இதுவொரு பல்துறைசார் நடவடிக்கையாக அமைந்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முயன்று வருகிறோம்.
நிச்சயமாக, எண்ணெய் மற்றும் ஏடிஎஃப் விலையில் தாக்கம் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் பயணிகளுக்கு கடத்தப்படாதிருக்கவும் வேண்டும். அதுவே அமைச்சகத்தின் நோக்கமாகும்” என்றார்.