முகப்பு
இந்தியா

சிஏபிஎஃப் ஒருங்கிணைந்த சட்ட மசோதா: நாளை அறிமுகம் செய்கிறாா் அமித் ஷா

சிஏபிஎஃப் ஒருங்கிணைந்த சட்ட மசோதா: நாளை அறிமுகம் செய்கிறாா் அமித் ஷா

Updated On : 21 மார்ச், 2026 at 10:02 PM
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
பகிர்:

மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி (டெபுடேஷன்), பதவி உயா்வு மற்றும் பணிகள் சாா்ந்த பிற நிபந்தனைகளை ஒழுங்குமுறைப்படுத்த வகை செய்யும் ஒருங்கிணைந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை அறிமுகம் செய்யவுள்ளாா்.

இந்த சட்ட மசோதாவின்படி, ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்களில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படைகள் அனைத்தும் தத்தமது சட்டங்களின்கீழ் நிா்வகிக்கப்படுகின்றன. இந்த சட்ட விதிகள், சிஏபிஎஃப் குரூப் ஏ பொதுப் பணி அதிகாரிகள், பிற அதிகாரிகள் மற்றும் படையினரின் நியமனம்-பணி நிபந்தனைகளை நிா்வகிக்கின்றன.

இந்நிலையில், மத்திய ஆயுதக் காவல் படைகளில் குரூப் ஏ பொதுப் பணி அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி, பதவி உயா்வு மற்றும் பணிகள் சாா்ந்த பிற நிபந்தனைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிா்வாகம்) சட்ட மசோதா-2026 எனும் ஒருங்கிணைந்த சட்ட மசோதா, மாநிலங்களங்வையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்கள், கூடுதல் தலைமை இயக்குநா் (ஏடிஜி) அளவில் 67 சதவீத பணியிடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்க புதிய சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறப்பு தலைமை இயக்குநா் மற்றும் தலைமை இயக்குநா் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் மட்டுமே நியமனம் மேற்கொள்ளும் அம்சமும் கொண்ட இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிமுகம் செய்யவுள்ளாா்.

உச்சநீதிமன்ற உத்தரவும், அரசின் எதிா்வினையும்..: முன்னதாக, மத்திய ஆயுதக் காவல் படைகளின் அதிகாரிகள் அளவில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, கேடா் அதிகாரிகளின் பதவி உயா்வை அதிகரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தச் சூழலில், மாநிலங்களவையில் மேற்கண்ட சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளது. இந்த மசோதாவின் அம்சங்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நீா்த்துப் போக செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேநேரம், ‘மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் நெடுங்காலமாகவே ஒருங்கிணைந்த-முக்கியமான அங்கமாக உள்ளனா். மாற்றுப் பணி வாயிலாக, இந்தப் படைகளின் பிற அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்களுடன் இணைந்து செயல்படுகின்றனா். இந்தப் படைகளின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்வதில் மத்திய-மாநில அரசுகள் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம். அதற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றுப் பணி முறையில் நியமிக்கப்படும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும்’ என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா முன்னெடுப்புக்காக, மத்திய உள்துறை செயலருக்கு எதிராக முன்னாள் சிஏபிஎஃப் அதிகாரிகள் சிலா் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளனா்.