எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!
பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது பற்றி...
எரிபொருள் தட்டுப்பாடு பற்றி மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் எரிபொருள் இடையூறு இல்லாமல் கிடைப்பதையும் முறையான விநியோகத்தை உறுதிசெய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
Advertisement
எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றது. நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்க உலகளாவிய நிகழ்வுகளை இந்த அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் உலகளாவில் எரிசக்தி தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இது நமது நாட்டிற்கும் ஒரு மிக முக்கிய சோதனையாக அமைந்துள்ளது. இச்சூழலை அமைதி, பொறுமை, பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலமே கையாள வேண்டும்.
விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்குமுன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடக்கவிருப்பதாகச் சொல்லப்படும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார். பஹ்ரைன், குவைத், ஜோர்டன். ஃபிரான்ஸ், மலேசியா, இஸ்ரேல் மற்றும் ஈரானைச் சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.