மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை!
மேற்காசியப் போர் குறித்து பிரதமர் மோடி விளக்கம்....
மேற்காசியப் போரால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே மூன்று வாரங்களைக் கடந்து நடைபெற்று வரும் போரால், சர்வதேச அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரானும், ஈரானின் எரிபொருள் நிலையங்கள் மீது இஸ்ரேல், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருவதால், சர்வதேச அளவில் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியுள்ளதால், எரிபொருள் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்தியாவில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்காசியப் போர், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
பிரதமர் பேசியதாவது:
மேற்காசிய நிலைமை கவலை அளிக்கிறது. கடந்த 3 வாரங்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி ஆகியோர் நிலைமை விளக்கியுள்ளனர்.
இந்த மோதல் மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால்தான், இந்த மோதலுக்கு விரைவான தீர்வு காணுமாறு அனைத்துத் தரப்பினரையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது.
போரில் ஈடுபட்டுள்ள மற்றும் இந்த மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. மோதல் நடைபெறும் பிராந்தியம், பிற நாடுகளுடனான நமது வர்த்தகத்துக்கும், குறிப்பாக நமது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளின் பெரும்பகுதியை கொண்டுவரும் ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்தப் பிராந்தியம் மற்றொரு காரணத்துக்காகவும் நமக்கு முக்கியமானது. வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வசித்து பணிபுரிந்து வருகிறார்கள். வணிகக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தியக் கப்பல் மலுமிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தியாவுக்கு அதிகளவிலான கவலைகள் உள்ளன. எனவே, இந்த நெருக்கடி குறித்து நமது நாடாளுமன்றத்திலிருந்து ஒருமித்த குரலும் கருத்தும் உலகைச் சென்றடைவது அவசியமாகும்.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது. நான் பெரும்பாலான மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொலைபேசி மூலம் நடத்தியுள்ளேன். அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளனர். இந்த மோதலின் போது, சிலர் உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
மேற்காசியப் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 3.75 லட்சம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் இன்னும் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளுக்கு அளிக்க தேவையான அளவில் உரங்களும் கையிருப்பில் உள்ளன. சர்வதேச அளவில் ரூ. 3,000-க்கு விற்கப்படும் யூரியா, நமது நாட்டில் ரூ. 300-க்கு விற்கப்படுகிறது.
மேற்காசிய நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நாள்தோறும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன ” எனத் தெரிவித்துள்ளார்.
Economic impact of the West Asian war! Modi's speech in the Lok Sabha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.