முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம்! மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய சர்ச்சை!!
மேற்கு வங்கத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் முஸ்லிம் வாக்காளர்கள் மட்டும் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
தேர்தலுக்கு முன்னதாக, கடந்த 2025-இல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்த பிகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து, தோ்தலைச் சந்திக்கவிருந்த தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 ஆம் கட்ட எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டியலில், தமிழகத்தில் இருந்து 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேபோல, மேற்கு வங்கத்தில் இருந்து 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஒரே வாக்குச்சாவடியைச் சேர்ந்த 340 முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பசிர்ஹாட் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போரோ கோப்ரா கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 5-ஐ சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் “உரிமை கோரப்பட்டுள்ளது” என்ற அடிப்படையில் பதிவு செய்திருந்தனர். இதற்கான முதற்கட்ட பட்டியல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகமது ஷஃபியுல் ஆலமின் பெயர் உள்பட பலரின் பெயர்கள் நீக்கப்பட்டதால், இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்துடன் மூன்று, நான்கு சான்றுகள் கொடுத்த பின்னரும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்ட ரீதியிலான தீர்வு வேண்டும் எனக் கோரி இந்த விவகாரத்தை தீர்ப்பாயத்துக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என ஆலம் தெரிவித்துள்ளார்.
பசிர்ஹாட் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பேஹம்பூர் கிராம பஞ்சாயத்துக்குள்பட்ட வாக்குச்சாவடி எண் 5-ல் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 992 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்தவர்களில் எஸ்ஐஆர் திருத்தத்தின் போது 38 பேர் இறந்தவர்கள், இடமாற்றம் உள்ளிட்டவைகளால் அடையாளம் காணப்பட்டு வழக்கம்போல நீக்கப்பட்டனர்.
மேலும், 358 பேர் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அழைக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் வரைவுப்பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், மீதமிருந்தவர்கள் தற்காலிகப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது துணைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 340 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “தேர்தல் ஆணையம் ஆதாரமாக ஒரு ஆவணம் கோரியிருந்த நிலையில், பலர் இரண்டு மூன்று ஆவணங்களை சமர்ப்பித்தனர். இருப்பினும், சில அரசியல்கட்சிகளின் செல்வாக்கு காரணமாக முஸ்லிம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன” என்றனர்.
The affected individuals, all belonging to the Muslim community from Booth No. 5 in Boro Gobra village, had previously been marked as "under adjudication" in the draft roll.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.