மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசு
கடந்த ஆண்டுகளில் மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் முடங்கிய ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டுகளில் மாநில அரசு முறையாக ஒத்துழைப்பு நல்காததால் ரயில்வே திட்டங்கள் முடங்கியதாக மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் அதிக பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியாகக் கோலோச்சிய திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
இந்த நிலையில், முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசை விமர்சித்து ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஜூன் 6) முன்வைத்த குற்றச்சாட்டில், ‘முந்தைய திரிணமூல் அரசால் ஆண்டுக்கணக்கில் ஒத்துழைப்பு இல்லாமையால் ரயில்வே திட்டங்கள் பல மேற்கு வங்கத்தில் முடக்கி நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், பாஜக அதிகாரத்துக்கு வந்த பின், அரசு நிர்வாக அணுகுமுறையில் ஏற்பட்டுள்ளதொரு மாற்றத்தால் இப்போது அந்தப் பணிகள் வேகமெடுக்கும் என்றும்’ குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் பங்கேற்ற அஸ்விணி வைஷ்ணவ், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே திட்டங்களுக்கான அனுமதி பெறுதல், நிலப் பிரச்சினைகள், சட்டரீதியான சவால்கள் ஆகியவற்றை மேற்கு வங்கம் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.