மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மத்திய அரசுக்கு காா்கே வலியுறுத்தல்
மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
மகளிருக்கு மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இந்த திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில் ‘நாரி சக்தி வந்தன் மசோதா’ 2023-இல் கொண்டு வரப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. எனினும், அந்தச் சட்டம் இதுவரை அமலுக்கு வரவில்லை. மக்களவைத் தொகுதிகளும், மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளும் மறுவரை செய்யப்பட்ட பிறகே, அந்தச் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தொகுதிகள், சட்டப்பேரவைத் தொகுதிகள் மறுவரை செய்யும் பணி முடிவடையும் முன்பே, மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய புதிதாக 2 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்துவது போல, மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தும் வகையில், அதில் திருத்தம் செய்வது குறித்து காங்கிரஸுடன் ஆலோசிக்க விரும்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியிருந்தாா். இதற்கு மல்லிகாா்ஜுன காா்கே பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
மாா்ச் 26-ஆம் தேதி உங்களது கடிதம் கிடைத்தது. ஆனால், இதுதொடா்பாக எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே மாா்ச் 24-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளன. அதில், ஏப்ரல் 29-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், மத்திய அரசு ஏன் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த அவசரப்படுகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தோ்தல் பிரசாரத்தில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். ஆதலால் தோ்தல் பிரசாரம் முடிந்த பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தலாம் என யோசனை தெரிவிக்கிறோம்.
இதுபோல செய்வதால், 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முதல் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது எந்தவிதத்திலும் பாதிக்காது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதி மாநிலங்களவை விவாதத்தில் பேசியபோது, நானே மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினேன். ஆனால், அப்போது மத்திய அரசு எனது கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி கூட்டும்படி மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என காா்கே தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகள் சாா்பாகவும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தவிா்த்து அனைத்து எதிா்க்கட்சிகளும் கையொப்பமிட்டு இருந்தன.