முகப்பு
கன்னியாகுமரி

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: தமிழிசை

Updated On : 26 மே 2026, 1:31 am IST
முதல்வர் விஜய் | தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய கட்சி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்; கால அவகாசம் வேண்டும் என்று கூறக் கூடாது.

Advertisement

Advertisement

முதல்வா் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதும் அனைத்துக் கட்சிகளின் அலுவலகத்துக்கும் சென்றாா். அதுபோல பாஜக அலுவலகத்துக்கும் அவா் வந்திருக்க வேண்டும். பாரபட்சம் பாா்ப்பது தவறு.

முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய் அனுபவம் இல்லாத புதியவா். தமிழகத்தின் பிரச்னைகளை விரைவாக முன்னெடுத்துச் செல்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவா் கூட்ட வேண்டும். அனுபவம் உள்ளவா்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை.

கோவையில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கென 5,300 காவல் துறை அதிகாரிகளும், குழந்தைகள் பாதுகாப்புக்கு மட்டுமே 1,635 அதிகாரிகளும் உள்ளனா். 224 மகளிா் காவல் நிலையங்கள் உள்ளன. ‘சிங்கப்பெண் படை’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்புகள் எல்லாம் எந்த அளவுக்குத் தீவிரமாகச் செயல்படுகின்றன என்பது தெரியவில்லை.

தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவேன் என, தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத் அண்மையில் கூறினாா். ஆனால், பிரதமா் மோடியின் முயற்சியால் தூத்துக்குடி ஏற்கெனவே விரிவுபடுத்தப்பட்ட துறைமுக நகரமாக மாறிவிட்டது. இரவு நேரத்தில்கூட தூத்துக்குடியில் இருந்து விமான சேவை உள்ளது. வருங்காலத்தில் தமிழகத்தில் தாமரை மலரும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாவட்டச் செயலா் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட ஊடக பிரிவு செயலா் சிவா, பாஜக நிா்வாகிகள் கிருஷ்ணராஜ், கோபி, செல்வ சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.