காங்கிரஸ் வெற்றி பெற்றால் 15 நாள்கள் வெளிநாட்டுச் சுற்றுலா! கேரளத்தில் நூதன வாக்குறுதி!!
காங்கிரஸ் வெற்றி பெற உதவினால், வளைகுடா நாடுகளுக்கு 15 நாள்கள் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளதைப் பற்றி...
கேரளத்தின் மலப்புரம் தொகுதியில் உள்ள தாவனூர் பேரவையில் வெற்றி பெற உதவினால், வளைகுடா நாடுகளுக்கு 15 நாள்கள் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் ஒருவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் களம் காண்கிறது.
அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) போட்டியிடுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களமாடுவதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரும், அக்கட்சியில் மாநிலத் துணைத் தலைவருமான சிபி பாவா ஹாஜி, அனைவரும் வியக்கும் வகையில் வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.
வரும் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கோட்டையாகக் கருதப்படும் தாவனுர் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், மாவட்டத் தலைவருமான விஎஸ். ஜாய்யை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உதவும் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள், மண்டல மற்றும் பஞ்சாயத்துக் குழுப் பொறுப்பாளர்களுக்கு 15 நாள்கள் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். இந்தச் சுற்றுப்பயணத்தில் தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகள் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வினய் கோயல், “இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது. மேலும், தகவல்கள் கிடைத்தவுடன் அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியினரின் தகவலின்படி, இந்த வாக்குறுதி வாக்காளர்களுக்கானது கிடையாது. இது வேட்பாளர்களை வெற்றி பெறவைக்கும் நிர்வாகிகளுக்கானது என்றும் தெரிவித்துள்ளனர்.
கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் தற்போதைய தாவனூர் எம்.எல்.ஏ. எம்டி ஜலீலை வி.எஸ். ஜாஸ் எதிர்கொள்ளவிருக்கிறார்.