கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
கார்கே - ராகுல் கையில் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்...
புது தில்லி : கேரள முதல்வர் நாற்காலி யாருக்கு? என்பதில் ஏற்பட்ட குழப்பத்துக்கு விடை காண தில்லியில் இன்று(மே 9) காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் கேரளத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்கள் சந்திப்பு நடைபெற்றது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வென்றது.
கேரளத்தின் அடுத்த முதல்வராக கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசனை தோ்வு செய்ய வேண்டும் என்பதே கட்சித் தொண்டா்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், கட்சி எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலுக்கு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
இதையடுத்து, முதல்வரை இறுதி செய்வதற்கு முன்பாக, வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரையும் காா்கே இன்று(மே 9) அழைத்து தனித்தனியாகப் பேசினார் என்று தகவலறிந்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனா்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில், தில்லியில் கார்கேவுடனான இன்றைய சந்திப்பில் கேரள முதல்வர் தேர்வில் சுமுக முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சி மேலிடம் எடுக்க கேரளத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவளித்து தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.