தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!
சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு
தில்லியில் காங்கிரஸ் தலைவர்களை கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கேரள முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து முதல்வர் வி.டி. சதீசன் நேற்று தில்லி சென்றார். காங்கிரஸ் தலைவர்களின் அழைப்புக்கு ஏற்ப அவர், தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
தொடர்ந்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தும் முதல்வர் சதீசன் வாழ்த்து பெற்றுள்ளார்.