கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள நிலையில், புதிய முதல்வராக யார்? பதவியேற்கப் போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 தொகுதிகளிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான 71-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய முதல்வருக்கான போட்டியில் மூன்று பேர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
கேரளத்தின் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயளாலர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கேரளத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் 63 சட்டப்பேரவை உறுப்பினர்களில் கே.சி. வேணுகோபால் முதல்வராகப் பதவியேற்க 47 பேரும், வி.டி. சதீஸனுக்கு 10 பேரும், ரமேஷ் சென்னிதாலாவுக்கு 6 பேரும் ஆதரவளிப்பதாக காங்கிரஸின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வி.டி. சதீஸனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்ய கட்சியின் தலைமைக்கு அதிகாரம் அளித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய முதல்வர் யார் என்ற தகவல் வருகிற மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.