முகப்பு
இந்தியா

மேற்காசிய பதற்றம்! தாக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: நிதியமைச்சா்

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

Updated On : 31 மார்ச் 2026, 12:49 am IST
மேற்காசிய பதற்றம்
பகிர்:

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மேற்காசிய நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்க கட்டுப்பாடு என போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுதவிர நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சூழலைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறை அமைச்சா்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் மோதல் நீடிக்கும் கால அளவைப் பொருத்தே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் அந்நிய முதலீடுகளில் ஏற்படும் தாக்கத்தைக் கூற முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.