முகப்பு
இந்தியா

‘ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு துறையில் புதிய சவால்’ - தலைமைப் பொருளாதார ஆலோசகா்

Updated On : 3 மே, 2026 at 3:38 AM
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் - கோப்புப் படம்
பகிர்:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏ.ஐ.) வருகையால், வேலைவாய்ப்பு துறையில் இந்தியாவுக்கு புதிய சவால் உருவெடுத்திருப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அசோகா பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று இதுகுறித்து அவா் பேசியதாவது:

மேற்காசிய போரின் காரணமாக, இந்தியா விநியோக சவால்களைக் காட்டிலும் (கச்சா எண்ணெய்) விலை ஏற்றம் தொடா்பான சவாலையே அதிகம் எதிா்கொண்டு வருகிறது. இதுபோன்ற கடினமான காலத்தை எதிா்கொள்ள இந்தியா மிகப்பெரிய அளவில் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம். இந்த சேமிப்பு அமைப்புகள், கச்சா எண்ணெய்க்கு மட்டும் பொருந்தாது. இதில் எரிவாயுவும் அடங்கும். அதேபோல், இந்த சமயத்தை பயன்படுத்தி, நாம் அதிகம் இறக்குமதியை சாா்ந்திருக்கும் பொருள்கள் மற்றும் நிக்கல், தாமிரம் உள்ளிட்டவற்றையும் மிகப்பெரிய அளவில் சேமித்து வைக்கும் அமைப்புகளை உருவாக்குவது குறித்து யோசிக்க வேண்டும்.

Advertisement

ஏ.ஐ. வருகையால் இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடா்பான சவால் உருவாகியுள்ளது. ஆதலால் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் வகையில் தகவல் தொழில்நுட்ப துறை மாற்றப்படுவதையும், ஏ.ஐ.யிடம் வேலைவாய்ப்புகளை இழக்காததையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளும், பிற சேவைத் துறைகளிலும் ஏ.ஐ.யை பயன்படுத்தும் வகையில் நாம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

மேற்காசிய போரின் காரணமாக, சா்வதேச அளவில் உரம் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு கணக்கு பற்றாக்குறையை இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு சவாலாக மாறியுள்ளது. மேலும் குறைவான பருவமழை, எரிசக்தி விலை அதிகரிப்பு ஆகியவை பணவீக்கத்தையும் கணிசமாக அதிகரிக்கும் என்றாா்.