முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு

மொத்தம் 22,79,743 போ் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 3 மே, 2026 at 3:22 AM
நீட் தோ்வு - Center-Center-Delhi
பகிர்:

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களில் தோ்வு நடைபெறுகிறது.

சுமாா் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 9,46,815 மாணவா்கள், 13,32,928 மாணவிகள் என மொத்தம் 22,79,743 போ் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 180 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கும் 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். நீட் தோ்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.