முகப்பு
இந்தியா

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 4 குழுக்கள் அமைத்து சிபிஐ விசாரணை...

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினா வங்கி / கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர் - எக்ஸ்
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 4 குழுக்கள் அமைத்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நீட் வினாத்தாளை வாங்கி விற்றதாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரை அதிகாரிகள் இன்று (மே 12) கைது செய்துள்ள நிலையில், அவர் டெலிகிராம் வாயிலாக நீட் வினாத்தாளை வாங்கியதும் அதற்காக ரூ. 10 லட்சம் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவரை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.

நாடு முழுவதும் 551 நகரங்களில் மே 3 ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. வெளிநாட்டிலும் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

Advertisement

இதனிடையே தேர்வு நடைபெற்று ஒரு வாரத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இது உறுதிப்படுத்தப்பட்டதால், மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை இன்று உத்தரவிட்டது.

இதனால் நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் 7 முதல் 10 நாள்களுக்குள் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.

மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கையால் எழுதப்பட்ட ஒரு வினா-விடை வங்கித் தாள் தேர்வுக்கு 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப்களில் பரவியுள்ளது. அதில், இருந்த 120 கேள்விகள் நீட் வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்ததால், வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ மாணவர் சுபம் கெர்னர் என்பவரை நாசிக் குற்றப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் டெலிகிராம் வாயிலாக நீட் வினாத்தாளை பெற்றதாகவும், இதற்காக ரூ. 10 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 4 குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

summary

Student arrested in NEET-UG case, paid Rs 10 lakh for leaked paper

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.