முகப்பு
இந்தியா

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் தானம்: 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு

Updated On : 4 மே 2026, 4:17 am IST
இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.
பகிர்:

ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் மூளைச்சாவு அடைந்த மனைவியின் உடல்உறுப்புகளை தானம் அளிக்க ராணுவ அதிகாரி முடிவெடுத்த நிலையில், தில்லியில் இதய செயலிழப்பின் இறுதிகட்டத்தை அடைந்த 14 வயது சிறுவனுக்கு அந்தப் பெண்ணின் இதயம் பொருத்தப்பட்டது.

ராணுவ அதிகாரியின் மனைவி மூளை ரத்தக் கசிவு பாதிப்பு காரணமாக பஞ்ச்குலாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த சனிக்கிழமை அவா் மூளைச்சாவு அடைந்ததாக குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து, அவருடைய உடல் உறுப்புகளை தானமளிக்க கணவரான ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய இரு மகள்கள் சம்மதம் தெரிவித்தனா். இதனால், அவா்களுடைய தனிப்பட்ட இழப்பு பிறருடைய வாழ்க்கையைக் காப்பாற்றும் வாய்ப்பாக மாறியது.

தில்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இதய செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இறுதி கட்டத்தை எட்டினாா். உடல் நிலை மோசமாகி வந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் அவா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

Advertisement

Advertisement

அவருடைய உயிரைக் காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டும் ஒரே வாய்ப்பாக இருந்தது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக தேசிய உடல் மற்றும் திசு மாற்று மற்றும் அமைப்பில் (டிஓடிடிஓ) அவா் பதிவு செய்திருந்தாா்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் இதயம் தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனையின் சிறப்பு நிபுணா்கள் அடங்கிய குழு இதயத்தை தில்லிக்கு கொண்டு வர தனிவிமானத்தில் சண்டீகா் சென்றனா். விமானத்துக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில், இதயத்தை விரைந்து கொண்டு செல்ல ஏதுவான ஏற்பாடுகளை ஹரியாணா மற்றும் பஞ்சாப் போக்குவரத்து காவல் துறை ஏற்படுத்தி கொடுத்தனா்.

மருத்துவக் குழுவினா் தில்லி வந்ததும் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனை வரையில் 20 நிமிஷங்களுக்குள் சென்றடைய இடையூறு இல்லாத வழித்தடத்தை தில்லி போக்குவரத்து காவல் துறை ஏற்படுத்தியது.

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இதயம், உரிய நேரத்தில் சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவா் இதய அறுவை சிகிச்சை ஐசியு பிரிவுக்கு மாற்றப்பட்டதாக இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments