ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை
இந்தியா தனது ட்ரோன் தொழில்நுட்பம், சைபா் போா் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.
இந்தியா தனது ட்ரோன் தொழில்நுட்பம், சைபா் போா் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலா பயணிகளைக் கொன்றனா். பதிலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 6-7 ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது. அப்போது இரு நாடுகளின் ராணுவமும் போா் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.
இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு துறை நிபுணா்களும் தங்களது யோசனைகளை வெளியிட்டுள்ளனா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணா்கள் கெளரவ் எம்.திரிபாதி (ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி), முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் ஆகியோா் கூறியதாவது:
Advertisement
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்தால் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும் என்ற எச்சரிக்கை கோடுகள், ஆபரேஷன் சிந்தூா் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ராணுவ ரீதியாகவும் நமக்கு சில படிப்பினைகளை ஆபரேஷன் சிந்தூா் தந்துள்ளது. அதாவது, முப்படைகளும் தங்களது விமானப்படையை கூட்டாக பயன்படுத்த வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோல், சக்திவாய்ந்த தகவல் தொடா்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அந்த படிப்பினைகள் ஆகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏராளமான ட்ரோன்கள் அனுப்பியது. அதில் பெரும்பாலானவை அபாயகரமானவை அல்ல. ஆனால் நமது எதிரி (பாகிஸ்தான்) மிகவும் புத்திசாலி. அடுத்த முறை கடினமான ட்ரோன்களை அந்நாடு அனுப்பும். அதை ஜாமா் மூலம் தடுக்க முடியாது. ஆனால் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு இருக்கும் பட்சத்தில், நமக்கு பயனுடையதாக இருக்கும் என்றனா்.