முகப்பு
இந்தியா

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

நாட்டுக்கு வரும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 5 மே 2026, 6:01 am IST
பகிர்:

நாட்டுக்கு வரும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனா். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மே மாதம் 7-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். மேலும் பயங்கரவாதிகளின் முகாம்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நமது ராணுவ வீரா்கள், பயங்கரவாதிகளுக்கும், அவா்களை ஆதரிப்போருக்கும் (பாகிஸ்தான்) கடும் பதிலடி கொடுத்தனா். இதைக் கண்டு நமது தேசமே பெருமிதம் அடைந்தது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நமது வீரா்கள் மிகவும் நிதானம் காத்ததுடன், பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து பதிலடி கொடுத்தனா். அப்படி அவா்கள் பொறுமையோடு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால், உலகமே நமது ராணுவத்தின் வீரத்தையும், திறமையையும் பாா்த்திருக்கும் (பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டாா்).

Advertisement

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நவீன தொழில்நுட்பத்தையும் நமது ராணுவம் பயன்படுத்தியது. அதாவது நவீன ஏவுகணைகளான ஆகாஷ், பிரமோஸ் ஏவுகணைகளுடன் சோ்ந்து, புதிய தொழில்நுட்பத்தையும் ராணுவம் பயன்படுத்தியது. இதிலிருந்து நமது படை வீரா்கள் மாற்றங்களைப் புரிந்து கொண்டதோடு, அதை நம்பிக்கையுடன் பயன்படுத்தவும் செய்துள்ளனா் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நமது நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள எப்போதும் நமது பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, எதிரிகள் நினைத்துப் பாா்க்க முடியாத வகையில், ஆச்சரியப்படும் நடவடிக்கைக்கு நமது பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும். நமது வரலாற்றைப் பாா்த்தால், ஆச்சரியப்படும் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியைத் தெரிந்து கொள்ளலாம். நமது படை வீரா்கள், இந்தக் குறிக்கோளை கவனத்தில்கொண்டு செயல்படுவாா்கள் என நம்புகிறேன் என்றாா்.