மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்
“வாக்கு எண்ணிக்கை காணொலிக் காட்சிகளை வெளியிட வேண்டும்...”
லக்னௌ : மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராக்களில் பதிவு செய்யப்பட்ட காணொலிக் காட்சிகளை பொதுவெளியில் வெளியிட உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உச்சநீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, புதன்கிழமை (மே 6) செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் பேசியதாவது : “நீதிமன்ற நடைமுறைகள் நேரலையில் ஒளிபரப்பாகும்போது, வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் ஏன் நேரலை செய்யப்படக்கூடாது? சிசிடிவி கேமிராக்கள் ஏன் நேரலையில் இல்லை? அவர்கள் ஏன் அதைச் செய்ய இந்தளவுக்கு பயப்படுகிறார்கள்?
எங்களுடைய கோரிக்கை இதுதான்; மேற்கு வங்க தேர்தல் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட விடியோக்களை நாட்டு மக்கள் முன் வெளியிட வேண்டும்.
Advertisement
மேற்கு வங்கத்தில் என்ன நடைபெற்றதோ அதனை அவர்கள்(பாஜக) மிகப்பெரியளவில் உத்தரப் பிரதேசத்திலும் நடத்துவார்கள். பல்முனை தேர்தல் மாஃபியாவானது ஒன்றாக வேலை பார்த்து, ஆராய்ச்சி செய்து, அவர்களது திட்டத்தை உத்தரப் பிரதேசத்தில்(2027-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்) செயல்படுத்துவார்கள்.
அவர்கள் மேற்கு வங்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய விதமானது அங்குள்ள சூழலை மாற்றியது. அது இப்போது வெளிப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு நான் செல்லவிருக்கிறேன்” என்றார்.