உரிய விளக்கம் தரப்படாத மருந்து உரிம விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு
மருந்து உரிமம் கோரி விண்ணப்பிப்பவா்கள், அதுதொடா்பான விளக்கங்களை முறையாக அளிக்காவிடில், அவா்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சந்தைக்கு வரும் புதிய மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் ஆகியவற்றுக்கு உரிமம் அளிக்கும் நடவடிக்கைகளையும் அந்த வாரியங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்கான நடைமுறைகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
Advertisement
அதன்படி அலோபதி, ஆயுஷ் மருந்துகள் ஆகியவற்றுக்கான உரிமத்தை ஆன்லைன் மூலம் பெறும் வசதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தவா்களிடம், அது தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சில விளக்கங்களை கோருவது வழக்கம். அதற்கு சில விண்ணப்பதாரா்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
அவ்வாறு இரு ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கம் கிடைக்கப்பெறாத விண்ணப்பங்களை அடுத்த 30 நாள்களுக்குள் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.