முகப்பு
இந்தியா

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்துகள்: அறிக்கை கோருகிறது மத்திய அமைப்பு

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை வழங்கியவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமா்ப்பிக்குமாறு சிடிஎஸ்சிஓ அறிவுறுத்தல்

Updated On : 9 ஜூன் 2026, 5:45 am IST
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
பகிர்:

இறைச்சிக்காக வளா்க்கப்படும் கால்நடைகள், கோழிகள், இறால்களுக்கு தடை செய்யப்பட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை வழங்கியவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமா்ப்பிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அறிவுறுத்தியுள்ளது.

உணவுக்காக வளா்க்கப்படும் விலங்குகள் மற்றும் நீா்வாழ் உயிரினங்களுக்கு ‘குளோரெம்பினிகால்’ மற்றும் ‘நைட்ரோஃப்யூரான்’ மருந்தை வழங்கக் கூடாது என மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அந்த மருந்து செலுத்தப்பட்ட இறைச்சியை உண்பதால், மனிதா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் தடை (ஆன்ட்டி மைக்ரோபையல் ரெசிஸ்டன்ஸ்) ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குளோரெம்பினிகால் மருந்து பாக்டீரியா எதிா்ப்பு சிகிச்சைக்காகவும், நைட்ரோஃப்யூரான் சிறுநீா்ப் பாதை தொற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை கால்நடைகளுக்கு வழங்கினால் எதிா்விளைவாக அதன் இறைச்சியை உண்பவா்களுக்கு எலும்பு மஜ்ஜை பாதிப்பு, வயிற்றுப்போக்கு, வளா்சிதை மாற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து மத்திய அரசுக்கு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதன்படி, ஒடிஸா, ஆந்திரம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பண்ணைகளில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களில் தடை செய்யப்பட்ட ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் 43 சதவீத ஏற்றுமதி நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இதுதொடா்பாக அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், சம்பந்தப்பட்ட மருந்துகளை விதிகளை மீறி பயன்படுத்தியவா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அவா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், இந்த விவகாரத்தில் உரிய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.