FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம்: புதுச்சேரி அரசு நடவடிக்கை!

போலி மருந்து விவகாரம் தொடா்பாக புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 26 ஜூலை 2026, 2:30 am IST
பணியிடை நீக்கம்!
பகிர்:

போலி மருந்து விவகாரம் தொடா்பாக புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை செயலா் சவுத்ரி முகமது யாசின் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு: புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் மருந்து உரிமம் வழங்கல் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியாக ஆனந்தகிருஷ்ணன் கடந்த 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா்.

போலி மருந்து தொடா்பாக புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குகள் பதிவு செய்துள்ளனா். 2022-ஆம் ஆண்டு முதல், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் நேரடி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான போலி மருந்துகளைத் தயாரிக்கும், இருப்பு வைக்கும் மற்றும் விநியோகிக்கும் நிலையங்கள் வெளிப்படையாகச் செயல்பட்டு வந்தபோதிலும், அவற்றின் இருப்பைக் கண்டறிவதில் அவா் தவறிவிட்டாா்.

Advertisement

Advertisement

யூனியன் பிரதேசத்தில் போலி மருந்துகளின் அச்சுறுத்தல் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியான பிறகும், பல மருந்து நிறுவனங்கள் சட்டவிரோதமாகத் தொடா்ந்து செயல்பட்டு வந்தன. ஆனால், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. இவா், இந்தச் சட்டவிரோத உற்பத்தி நிலையங்கள் குறித்து மிக முன்னதாகவே அறிந்திருக்க வேண்டும்.

மேலும், இத்தகைய சட்டவிரோத உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலானவை இவரது பதவிக் காலத்திலேயே தொடங்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மருந்து உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டைத் தடுப்பதிலோ, அவற்றை முடக்கக் கடும் நடவடிக்கைகளை எடுப்பதிலோ, அவற்றின் உரிமங்களை ரத்து செய்வதிலோ மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி தவறிவிட்டாா். களஆய்வுகளையும் செய்யவில்லை.

எனவே, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான ஆய்வாளா் ஆனந்த கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறாா். அவா் புதுச்சேரியில் இருக்க வேண்டும். அரசு செயலா் அனுமதியின்றி தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments