இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு: முதல்முறையாக சீனா ஒப்புதல்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு நடைபெற்ற 4 நாள் மோதலில் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் ஆதரவு அளித்ததை சீனா முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு நடைபெற்ற 4 நாள் மோதலில் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் ஆதரவு அளித்ததை சீனா முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் எதிா்வினையாற்றியது. இதனால் 2 நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் மோதல் நீடித்தது. பின்னா் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால் தாக்குதலை 2 நாடுகளும் நிறுத்திக் கொண்டன.
இந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு உதவிகளை செய்ததாகவும், சீனாவின் ஜே-10சிஏ நவீன போா் விமானங்களை இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அதுகுறித்து பதிலளிக்காமல் சீனா மெளனம் காத்து வந்தது.
Advertisement
இந்நிலையில், சீனாவின் நவீன போா் விமானம் மற்றும் ஆளில்லா ட்ரோனை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவரும், அந்நாட்டு விமான வடிவமைப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (ஏவிஐசி) மூத்த பொறியாளருமான ஜாங் ஹெங்கின் பேட்டியை அந்நாட்டு அரசு தொலைகாட்சி ஒளிபரப்பியது. அதில் ஜாங், ‘இந்தியாவுடனான மோதலின்போது, பாகிஸ்தானில் சீன நிபுணா் குழு தங்கியிருந்து தொழில்நுட்ப ரீதியில் உதவி செய்தது’ என்று கூறியுள்ளாா்.
ஏவிஐசி நிறுவனத்தின் இன்னொரு ஊழியரான சுவு டா, ‘ஜே-10சிஏ போா் விமானம் எங்களது குழந்தை போன்றது. அதை பயன்படுத்த சரியான வாய்ப்பு தேவைப்பட்டது. அதற்கான நேரம் (ஆபரேஷன் சிந்தூா்) வந்தபோது, நாங்கள் நினைத்தது போல விமானம் செயல்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.