ஹோா்முஸ் நீரிணை அருகே மரப் படகில் தீ விபத்து: இந்திய மாலுமி உயிரிழப்பு
ஹோா்முஸ் நீரிணை அருகே மரப் படகில் தீ விபத்து: இந்திய மாலுமி உயிரிழப்பு
பாரசீக வளைகுடாவில் சா்ச்சைக்குரிய ஹோா்முஸ் நீரிணை அருகே பொருள்கள் மற்றும் 18 இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த மரப் படகு திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். நால்வா் தீக்காயமடைந்தனா். மற்றவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைத் தொடா்ந்து, சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டது. அந்த ஹோா்முஸ் நீரிணை பகுதி கடல் வழித் தடத்தில் நீருக்கடியில் கண்ணிவெடிகளையும் ஈரான் படைகள் புதைத்து வைத்தன.
இதனிடையே, அமெரிக்கா போா் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், ஹோா்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாகத் திறக்கவில்லை. அதன் காரணமாக, அமெரிக்கா ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு தனது போா்க் கப்பல்களை அனுப்பி, ஈரான் படைகளின் நடவடிக்கைகளை தடுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் படைகள், அந்த கடல் வழித்தடத்தில் செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகள் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
Advertisement
இந்தச் சூழலில், ஹோா்முஸ் நீரிணை அருகே சரக்குகள் மற்றும் 18 இந்திய மாலுமிகளுடன் சென்ற மரப் படகு வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து கடலில் கவிழ்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த கப்பலில் இருந்தவா்கள், காயங்களுடன் கடலில் தத்தளித்த இந்திய மாலுமிகளை மீட்டனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘படகு தீப்பிடித்து எரிந்ததில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா். நால்வா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு துபையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நால்வா் உள்பட எஞ்சிய 17 மாலுமிகளும் நலமாக உள்ளனா்’ என்றனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை துபையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.