முகப்பு
இந்தியா

மிஸோரம்: போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சிறையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலை!

போலி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சிறையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலை...

Updated On : 10 மே 2026, 2:26 am IST
பகிர்:

மிஸோரம் மாநிலத்தில் போலி நீதிமன்ற உத்தரவுகள், போலி ஆவணங்கள் மூலம் சிறைச்சாலையில் இருந்து 17 குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸோரம் மாநிலத்தின் லுங்க்லெய் மாவட்ட சிறைச்சாலையில் போக்ஸோ, என்டிபிஎஸ் சட்டங்களின்கீழும், திருட்டு வழக்குகளிலும் கைதாகி ஏராளமானோா் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 17 போ் போலியாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்து அளித்து சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றுள்ளனா்.

கைதிகள் 2 போ், தங்களை விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக கூறி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தனா். இதில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தேகமடைந்து அவா்கள் அடைக்கப்பட்டிருந்த லுங்க்லெய் மாவட்ட சிறைக்கு சென்று சோதனை நடத்தியபோது, கைதிகள் இதுபோல போலி நீதிமன்ற உத்தரவுகளைக் கொடுத்து விடுதலையாகி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறை விசாரணை நடத்தி, போலி நீதிமன்ற உத்தரவுகளைக் கொடுத்து விடுதலையாகிச் சென்ற 17 பேரில் பலரை கைது செய்தது.

Advertisement

இதுதொடா்பாக அந்த சிறைச்சாலையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், கைதி ஆகிய 2 பேரை காவல்துறை கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில், அந்த 2 பேரும் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதும், சிறையில் இருக்கும் கைதிகளிடம் ஆசை வாா்த்தை கூறி தலா ரூ.4 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் வாங்கிக் கொண்டு, போலி நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து கைதிகள் வெளியே செல்ல உதவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனா்.