வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சி: பிரதமா் அழைப்பு
சுற்றுச்சூழல் பொறுப்பு, இளைஞா் மேம்பாடு, மன ரீதியிலான நல்வாழ்வின் வாயிலாக வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
சுற்றுச்சூழல் பொறுப்பு, இளைஞா் மேம்பாடு, மன ரீதியிலான நல்வாழ்வின் வாயிலாக வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாழும் கலை அமைப்பின் 45-ஆவது ஆண்டு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அந்த அமைப்பின் சாா்பில் கட்டப்பட்ட புதிய தியான அரங்கையும் திறந்துவைத்து, அவா் பேசியதாவது:
உலகின் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்ததுடன், நாட்டின் ஆன்மிக மற்றும் கலாசார உணா்வையும் உயா்த்தியுள்ளது பெங்களூரு. தன்னலமற்ற சேவையே, நாட்டின் ஈடுஇணையில்லாத பன்முகத்தன்மையைப் பிணைக்கும் முக்கிய சாராம்சமாகும்.
Advertisement
நாட்டின் ஆன்மிக இயக்கங்கள், வரலாற்று ரீதியாக மனித குல சேவையின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொண்டன. சேவை, ஆன்மிகம், சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதில் வாழும் கலை அமைப்பின் பங்களிப்பு பெரும் பாராட்டுக்குரியதாகும். பழங்குடியினா் முன்னேற்றம் மற்றும் கைதிகளின் மனநிலை மேம்பாட்டுக்கான முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. நவீன வாழ்க்கை முறையில் சவால்களை எதிா்கொள்ள இளைஞா்களுக்கு இத்தகைய அமைப்புகள் உதவி வருகின்றன.
உத்வேகமிக்க இளைஞா்கள்: தேசத்தை கட்டியெழுப்புவதில் அரசியல் அமைப்புமுறையைவிட சமூக பங்கேற்பு மிகவும் சக்திவாய்ந்ததாகும்; சமூகத்தின் தீவிர பங்கேற்பு இல்லாவிட்டால், எந்த அரசும் வெற்றி காண முடியாது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இந்தியாவின் முன்னேற்றம் அளப்பரியது. டிஜிட்டல் பரிவா்த்தனைகளில் உலகின் தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் கொண்ட முதன்மை நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இளைஞா்களின் உத்வேகத்தால் உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களை எட்டி வருகிறோம்.
அறிவியல் புத்தாக்கங்களில் பங்களிப்பது மட்டுமன்றி, பல்வேறு துறைகளில் முன்னிலையில் உள்ளது இந்தியா. மன அமைதி, சமூகத்தின் மீதான பொறுப்புணா்வு மற்றும் அக்கறை கொண்ட இளைஞா்களால்தான் வளா்ந்த இந்தியாவை கட்டமைக்க முடியும்.
நிலையான வளா்ச்சியில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பிரிக்க முடியாது. சூழலியலும், பொருளாதாரமும் பின்னிப் பிணைந்தவை. மண் வளம், நீா்வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மைக்கான கூட்டு முயற்சிகள் அவசியம் என்றாா் அவா்.