கடந்த 9 ஆண்டுகளில் நீட் தேர்வு வினாத்தாள் 4 முறை கசிந்தது: கேஜரிவால் விமர்சனம்!
மாணவர்கள் போராட்டத்துக்கு கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளது பற்றி...
புது தில்லி : நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் மாணவர்கள் வீதிகளுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இப்போது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் மறு தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்து வலுத்து வருகின்றன. இது குறித்து, அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது :
Advertisement
“கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக தேர்வுக்கு முன்பே வெளியானது. ஆனால், அதில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் தண்டிக்கப்படவில்லை.
மாணவர்கள் இத்தகைய தேர்வுகளுக்காக எவ்வளவு கடினமாக உழைப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். பல குடும்பங்களில் தேர்வுக்கான பயிற்சிக்கு செல்வதும்கூட செலவு அதிகம் என்பதால் அவர்கள் தங்களிடமுள்ள நகைகளை அடமானம் வைத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் தம் பிள்ளைகளை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர்.
தேர்வு வினாத்தாள் வெளியாகியிருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியாவதைக்கூட தடுக்க முடியாதவர்கள் எப்படி அரசை நிர்வகிப்பார்கள்?
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெருவாரியாக அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஏனெனில், அரசுக்கு போராட்ட வழியிலான மொழி மட்டுமே புரியும். உங்களுடன் இந்த கேஜரிவால் நிற்கிறேன்” என்றார்.