இணையவழி குற்றம்: இலங்கையில் 173 இந்தியா்கள் கைது
இலங்கையில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 173 இந்தியா்கள் உள்பட 198 வெளிநாட்டவா்கள் கைது
இலங்கையில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 173 இந்தியா்கள் உள்பட 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அந்நாட்டு காவல் துறை தெரிவித்ததாவது: இலங்கையில் உள்ள காலி, ஹிக்கடுவ, மிதிகம பகுதிகளில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக 198 வெளநாட்டவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். அவா்களில் 173 போ் இந்தியா்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவா்கள். அவா்கள் சுற்றுலா விசா காலாவதியான பிறகும் இலங்கையில் தங்கி வேலை தேடியுள்ளனா். வரி விலக்குக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தனா். இணையவழி குற்றச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
கடந்த வாரம் இதே குற்றத்தில் ஈடுபட்டதாக 250 சீனா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 198 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தது.
நிகழாண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மே 5 வரை, இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கையில் 628 வெளிநாட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் இந்தியா, சீனா, வியத்நாம், மியான்மா், பிலிப்பின்ஸ், கம்போடியா நாடுகளைச் சோ்ந்தவா்கள்.