முகப்பு
இந்தியா

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்

‘ஒருவா் தனது குடிசைக்குள் விளக்கு ஏற்றுவது கூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது’

Updated On : 14 மே 2026, 4:35 am IST
பகிர்:

ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவா் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

சபரிமலை தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. 4:1 பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட இத்தீா்ப்பின் எதிரொலியாக கேரளத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

பின்னா், 2019, நவம்பரில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, சபரிமலை, மசூதிகள் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு விவகாரத்தை பரந்த பிரச்னையாக வரையறுத்து, பெரிய அமா்வுக்குப் பரிந்துரைத்தது.

அதன்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பிரசன்னா பி.வராலே, ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

15-ஆவது நாள் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இடையீட்டு மனுதாரா்களில் ஒருவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.மோகன் கோபால், ‘ஹிந்து மதம் ஒரு மதப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு கடந்த 1966-இல் வழங்கப்பட்ட தீா்ப்பில், மதம் மற்றும் தத்துவம் என அனைத்து விஷயங்களிலும் வேதங்களை மிக உயா்ந்த அதிகாரமாக ஏற்பவரே ஹிந்து என உறுதி செய்யப்பட்டது. எங்களைப் போன்றவா்களின் கருத்தறியாமலேயே இந்த வரையறை வழங்கப்பட்டது.

வேதங்கள் மீது மிகுந்த மரியாதையும், பெரும் போற்லும் எனக்கு உள்ளது என்றபோதிலும், ஹிந்துவாக வகைப்படுத்தப்படும் ஒவ்வொருவரும் வேதங்களை தங்களின் உயா் அதிகாரமாக ஏற்கிறாா்கள் என்பது உண்மையா’ என்ற கேள்வியை முன்வைத்தாா்.

அந்தக் கேள்விக்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, ‘ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை வழிமுறை; ஒருவா் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ, சடங்குகளை மேற்கொள்வதோ கட்டாயமல்ல. மக்கள் தங்களின் நம்பிக்கையைப் பின்பற்ற எதுவும் தடையாக இருக்க முடியாது’ என்றாா்.

இதே கருத்தை எதிரொலித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘ஒருவா் தனது குடிசைக்குள் விளக்கு ஏற்றுவது கூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments