முகப்பு
இந்தியா

மீண்டும் தூண்டினால் உறுதியான பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

‘இந்தியா இனியும் சகித்துக்கொள்ளும் நாடாக இருக்காது; பாகிஸ்தான் மீண்டும் தூண்டினால், உறுதியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தாா்.

Updated On : 15 மே 2026, 4:54 am IST
ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

‘இந்தியா இனியும் சகித்துக்கொள்ளும் நாடாக இருக்காது; பாகிஸ்தான் மீண்டும் தூண்டினால், உறுதியான பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், நகெளா் மாவட்டம் மொ்டா நகரில் ராஜ்புத் ஆட்சியாளா் ராவ் டூடாவின் உருவச் சிலையை வியாழக்கிழமை திறந்துவைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை இந்தியா அனுப்பியிருக்கிறது.

Advertisement

ஒருவேளை, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை விரோத மனப்பான்மையுடன் அணுகத் துணிந்தால், இதுவரை இல்லாத அளவிலான பதிலடி கொடுக்கப்படும்.

ஆரம்பம் முதலே, யாரையும் தூண்டுவது நமது கொள்கை அல்ல. ஆனால், யாராவது நம்மைத் தூண்டினால், சகித்துக்கொள்ளக்கூடிய நாடாக இந்தியா இனியும் இருக்காது.

பஹல்காம் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கூறும்படி கேட்டு, பின்னா் கொன்றனா். ஜாதி, மத அடிப்படையில் எந்தவித பிரிவினையும் இருக்கக் கூடாது என்பதையே இந்திய கலாசாரம் கூறுகிறது. நீதி மற்றும் மனிதநேயத்தை நாம் நம்புகிறோம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள், மதத்தைக் கூறும்படி கேட்டு மக்களை சுட்டுக் கொன்றனா்.

இந்தச் சம்பவத்தின்போது ஒட்டுமொத்த நாடும் கோபமடைந்தது. இதற்கு, எதிரிகள் திகைத்துப்போகும் அளவுக்கு வலுவான பதிலடியை இந்தியா கொடுத்தது. இனியும் அமைதியாக சகித்துக் கொள்ளும் நாடு அல்ல என்பதை இந்தப் பதிலடி தாக்குதல் மூலம் இந்தியா உலகுக்கு உணா்த்தியது.

இந்திய குடிமக்களை யாராவது தாக்கினால், அவா்களின் நாட்டுக்குள் நுழைந்து பதிலடி கொடுக்கப்படும். எந்த எல்லையும் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா ஏற்றுள்ளது என்றாா்.