எரிபொருள் விலை உயர்வு மோடி அரசு உருவாக்கிய நெருக்கடி: கார்கே குற்றச்சாட்டு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு கார்கேவின் பதிவு பற்றி..
பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு மத்திய அரசைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,
நாடு தற்போது சர்வதேச எரிபொருள் நெருக்கடியை மட்டுமல்லாமல், அரசின் திறமையின்மை மற்றும் தொலைநோக்குச் சிந்தனையின்மை ஆகியவற்றால் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடியையும் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
Advertisement
இந்த நெருக்கடி, மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதாகும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்காக நாட்டின் சாமானிய மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை விலையாகச் செலுத்தி வருகின்றனர்.
டீசல் விலை உயரும்போது, அது நாடு முழுவதும் பணவீக்கத்தின் தொடர் விளைவை உருவாக்குகிறது. தொழில்துறை முதல் குடும்பங்களின் வரவுசெலவு மற்றும் விவசாயிகள் வரை அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி உத்தி மற்றும் வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு கையாண்டு வரும் விதம் குறித்தும் கார்கே கேள்வி எழுப்பினார். மேற்காசியப் போர் தொடங்கியபோது எல்லாம் நன்றாக இருக்கிறது என நாட்டு மக்களிடம் கூறப்பட்டது. காங்கிரஸின் கேள்விகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அதற்கு மாறாக அமெரிக்காவின் அனுமதி மற்றும் ஒப்புதல் காரணமாக நமது இறையாண்மை பிணையாக வைக்கப்பட்டது. தேர்தல் காலங்களில் மோடி அரசு எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என்பது போலவும், மாநிலங்களில் தேர்தல்களைச் சந்திப்பது மட்டுமே மத்திய அரசின் வேலை என்பது போலவும் நடந்துகொள்கிறது.
தற்போது நெருக்கடி தீவிரமடைந்துவரும் நிலையில், வீட்டிலிருந்து பணிபுரிதல் மற்றும் எரிபொருள் சேமிப்பு என்று சத்தம் எழுப்பத் தொடங்கியிருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மே 15 (இன்று) முதல் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.
புது தில்லியில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 94.77-லிருந்து ரூ. 97.77-ஆகவும், டீசல் விலை ரூ. 87.67-லிருந்து ரூ. 90.67-ஆகவும் உயர்ந்தது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 107.97-ஆகவும், டீசல் விலை ரூ. 93.23-ஆகவும் அதிகரித்தது. இதற்கிடையில், மேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி இருந்தபோதிலும், மற்ற பல நாடுகளை விட எரிபொருள் விலை உயர்வை இந்தியா கட்டுக்குள் வைத்துள்ளது.
மலேசியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிகக் கடுமையாக இருந்ததாகவும், ஆனால் இந்தியா அந்த உயர்வை சுமார் மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விலை உயர்வை நியாயப்படுத்தினார்.