அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு
அதானியை விடுவிக்க பிரதமர் பேரம் பேசியதாக ராகுல் குற்றச்சாட்டு...
தொழிலதிபர் கெளதம் அதானியை விடுவிக்கும் பேரத்தை பிரதமர் நரேந்திர மோடி முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கெளதம் அதானிக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கை தற்போதைய டொனால்ட் டிரம்ப் அரசு கைவிட முடிவெடுத்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை நடத்துவதற்காக அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரும், புகழ்பெற்ற ’சல்லிவன் & கிராம்வெல்’ சட்ட நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை சமீபத்தில் அதானி நியமித்திருந்தார்.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்க நீதித் துறையுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் ஜே. ஜியுஃப்ரா, அரசுத் தரப்பில் வழக்கை கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க அதானி தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசிடம் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில், “சரணடைந்த பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை, ஆனால், பேரம் பேசி அதானியை விடுவித்துள்ளார்” என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.