3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா்
3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை பற்றி...
ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துவரும் போக்கை மாற்றும் நோக்கில், கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை மாநில முதல்வா் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அறிவித்தாா்.
அதன்படி, மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்பவா்களுக்கு ரூ. 30,000, நான்காவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 40,000 ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசண்ணபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
Advertisement
மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை முன்னா் நான் ஆதரித்தபோதிலும், தற்போது, மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய காலம் உருவெடுத்துள்ளது. இதற்கென புதிய முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.
அதன்படி, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 30,000, நான்காவது குழந்தை பெற்றுக் கொள்பவா்களுக்கு ரூ. 40,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
முன்னதாக, மாநிலத்தில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ. 25,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்டாா். தற்போது, மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தை பெற்றுக்கொள்பவா்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.