தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து...
தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (யூடிஎஃப்) சார்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.
அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்த நிலையில் அந்தத் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
Advertisement
இதற்கான மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும் இனிவரும் காலங்களில் நீட் தேர்வு கணினிவழியில் நடைபெறும் எனவும் என்டிஏ உத்தரவிட்டிருந்தது. மேலும், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி (யூடிஎஃப்) சார்பில், தேசிய தேர்வு முகமையை அதன் தற்போதைய வடிவத்தில் கலைக்கக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 32-ஆவது பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான, ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி, என்டிஏ நீட் தேர்வை நடத்தியதில் தோல்வி அடைந்ததாகக் குற்றம் சாட்டியும், தேர்வு நடத்தப்படும் முறையில் சீர்திருத்தங்களைக் கோரியும் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.