வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜன்!
மீனாட்சி நடராஜன் தனது மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது பற்றி...
மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வியாழக்கிழமை (ஜூன் 11) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் பாஜக சார்பில் இரண்டு பேரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றிபெற முடியும்.
இதையடுத்து எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் தேர்தல் ஆனையத்திடம் புகார் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது. ஆகையால், பாஜக வேட்பாளா்கள் மூன்று பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்தார் மீனாட்சி நடராஜன். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.