வற்புறுத்திக் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த கணவன்! கர்ப்பிணி மரணம்!
ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டத்தில் கணவர் கடுமையாகத் தாக்கியதில் 5 மாதக் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், 41 வயதான கர்ப்பிணிப் பெண் தனது கணவனரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கட்டாய கருக்கலைப்பு மாத்திரைகள் அளிக்கப்பட்டதன் விளைவாகக் கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது,
Advertisement
ஹமீர்கர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிஎஸ்எல் காலணி பகுதியில் புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கோபி சிங் யாதவ் என்பவர் ஐந்து மாதக் கர்ப்பிணி மனைவி ரோலி தேவியைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தம்பதியரின் 14 வயது மகள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், தந்தை தொடர்ந்து எனது தாயைத் தாக்கியதாகவும், கருக்கலைப்பு மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்தார். இதனால், தாயின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கருச்சிதைவு ஏற்பட்டது. அதிகப்படியான ரத்தப்போக்கு உண்டானதே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது என்று கூறினார்.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணை பிரதேசப் பரிசோதனை நடத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த அதிகாரி, அப்பெண்ணின் உடல்நிலை திடுக்கிடும் வகையில் இருந்ததாக கூறினார். பெண்ணின் தலை, முகம், இடுப்பு உள்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பலமான காயங்கள் இருந்ததாகவும், அப்பெண் தொடர் வன்முறைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அப்பெண் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் உடலில் இருந்ததாக அவர் கூறினார்.
மகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கர்ப்பிணியைக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.