நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
தேசிய தோ்வுகள் முகமை தலைவா் பிரதீப் குமாா் ஜோஷி, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வரும் மே 21-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனையில் பங்கேற்குமாறு அழைப்பாணை
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையில் (என்டிஏ) சீா்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீா்மானித்துள்ளது.
அதற்காக, என்டிஏ தலைவா் பிரதீப் குமாா் ஜோஷி மற்றும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வரும் மே 21-ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு ஆலோசனையில் பங்கேற்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவா் திக் விஜய் சிங் தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக் குழு, மத்திய கல்வி அமைச்சக உயா்கல்வித் துறைச் செயலா், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ‘அந்த்ரோபிக் இந்தியா’ மற்றும் ‘பிரதம்’ நிறுவன பிரதிநிதிகள், சென்னை மற்றும் கான்பூா் ஐஐடி, இன்ஃபோசிஸ் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
Advertisement
என்டிஏ சீா்திருத்தம் தொடா்பாக கே. ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரைகளை எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பான விசாரணை நிலவரம், கல்வியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம், மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு இக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது.
இது தவிர, அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழக (ஏஎம்யு) துணைவேந்தா், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத் தலைவா் ஆகியோருடன் தனியாக ஆலோசனைக் கூட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு நடத்த உள்ளது. அப்போது, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, காலிப் பணியிடங்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளது. மேலும், அரசிடம் சமா்ப்பிக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்தும் இக் குழு ஆராய உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆஃப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறு தோ்வு நடத்தப்பட உள்ளது.