பிரதமரின் அரசுமுறை பயணத்தில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்
பிரதமரின் அரசுமுறை பயணத்தில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாள் அரசுமுறை பயணத்தில் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக, ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமா் மோடி சென்றிருந்த நிலையில், பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது, "ஸ்வீடன் நாட்டின் பயணத்தின்போது, அந்நாட்டுடன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் தொடர்பான கூட்டாண்மையில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இது நமது பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை இரட்டிப்பாக்கும்.
Advertisement
Advertisement
4 நாடுகளிலிருந்து ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இது நம் நாட்டின் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நார்வேயுடன் ஒரு பசுமை கூட்டாண்மையும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்துடனும் ஒரு கூட்டாண்மை மேற்கொள்ள வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எரிசக்தித் துறையில் ஒரு புதிய கூட்டாண்மை தொடங்கப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் 16 செப்புத் தகடுகள் பிரதமரால் கொண்டுவரப்பட்டன.
இத்தாலியுடன் முக்கியமான கனிமங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். பாதுகாப்பில் கூட்டு தயாரிப்பு, இந்தியா - இத்தாலி இடையேயான பாதுகாப்பை வலுப்படுத்தும். இந்தியா - இத்தாலி இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஒரு புதிய வேகத்தை நாங்கள் அளிக்கப் போகிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, இந்தியாவில் 30 மில்லியன் பீப்பாய் பெட்ரோலிய இருப்பு உருவாக்கப்படும். மேலும், எல்பிஜி விநியோக ஒப்பந்தத்தின் மூலம், மில்லியன் கணக்கான நுகர்வோருக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான எல்பிஜியை உறுதி செய்யப்படும்.
இந்தியா, இன்று உலகின் நண்பர் மட்டுமல்ல, நம்பகமான கூட்டாளியும்கூட" என்று தெரிவித்தார்.