பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்
பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் மோடி உயர்த்தியுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தது குறித்து...
பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளதாக நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரின் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலையேற்றம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.83 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து பேசிய பியூஷ் கோயல், “பிரதமர் மோடி, உலகெங்கிலும் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாலும், அவர் உருவாக்கிய நல்லுறவுகளாலும் இந்தியாவின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பெற்றுள்ளது. மக்கள் இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாகக் கருதுகின்றனர். இது இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
எரிபொருளின் விலை உயர்வை பார்க்கும்போது, மக்களுக்கு அதிகம் சிரமம் ஏற்படக்கூடாது என்பதை கருத்திற்கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார். இதில் 90 சதவிகித சுமையை மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.