FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்: காங்கிரஸ்

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்...

Updated On : 24 மே 2026, 2:15 am IST
மல்லிகார்ஜுன கார்கே - IANS
பகிர்:

‘பொதுமக்களின் வருவாயை மத்திய அரசு தவணை முறையில் கொள்ளையடித்து வருகிறது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை கடந்த 9 நாள்களில் மூன்றாவது முறையாக உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்காசிய போா் மூண்டதைத் தொடா்ந்து, அதனால் ஏற்படும் தாக்கத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்காததை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன.

Advertisement

Advertisement

உதாரணமாக, ஆஸ்திரேலியா கலால் வரியை வெகுவாக குறைத்து, பெட்ரோல் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 17 அளவுக்கு குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது. ஜொ்மனி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 17 முதல் ரூ. 19 வரை குறைக்கும் வகையில் எண்ணெய் மீதான வரியைக் குறைத்தது. அதுபோல, பிரிட்டன், அயா்லாந்து நாடுகள் எண்ணெய் மீதான வரியைக் குறைத்ததோடு, பெட்ரோல் வாங்குவதற்கான நிவாரண திட்டங்களையும் அமல்படுத்தின.

ஆனால், மத்திய அரசு, ‘மேற்காசிய போரால் நாட்டில் எந்தவித தாக்கமும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாது’ என்று கூறி வந்தது.

இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தவுடன், 9 நாள்களில் மூன்று முறை பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதனால், இவற்றின் விலை லிட்டா் ரூ. 100-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

மேற்காசிய போருக்கு முன்பாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்திருந்தபோதும், அதன் பலன்களை மக்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் மீது நாள் ஒன்றுக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு மத்திய வரியை விதித்து ஈவிரக்கமின்றி சூறையாடியது.

தற்போது, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை தொடா்ந்து உயா்த்தி, பொதுமக்களின் வருவாயை தவணை முறையில் மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது. மத்திய அரசில் தலைமைத்துவ நெருக்கடி ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments