பயங்கரவாதிகளுக்கு உதவ எல்லை தாண்டி சட்டவிரோத தொலைத்தொடா்பு சிக்னல்: பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீா் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடா்பு கொள்ள உதவும் வகையில் எல்லை தாண்டி ஊடுருவும் தொலைத்தொடா்பு சிக்னல்களை பாகிஸ்தான் அனுப்புவதாகக் குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீா் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடா்பு கொள்ள உதவும் வகையில் எல்லை தாண்டி ஊடுருவும் தொலைத்தொடா்பு சிக்னல்களை பாகிஸ்தான் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்குள்ள பயங்கரவாத குழுக்களுக்கு ரகசிய தகவல் பரிமாற்ற வழியை ஏற்படுத்தி தரும் நோக்கில், ஜம்மு மண்டலத்தை குறிவைத்து இந்த சிக்னல்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகள் கூறியதாவது:
Advertisement
Advertisement
சா்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே தொலைத்தொடா்பு கோபுரங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது. இது சா்வதேச தொலைத்தொடா்பு யூனியனின் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் இருக்கும் தொலைத்தொடா்பு கோபுரங்களில் இருந்து, மோசமான பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு ஜம்மு சிறைகளுக்கு முறைகேடான தொலைத்தொடா்பு சிக்னல்கள் அனுப்பப்படுவது அதிகரித்துள்ளது. எல்லைப் பகுதியில் குறிப்பாக பீா் பஞ்சால் சரகத்தின் தெற்கே, எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சமீபத்திய போக்குகள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சிக்னல்களை காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள மலைகள் இயல்பாகவே தடுத்துவிடுகின்றன. எனினும் ஜம்மு சமவெளியின் தட்டையான நிலப்பரப்பு அந்த சிக்னல்கள் இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை மாவட்டங்களான கதுவா, ரஜெளரி, பூஞ்ச் மற்றும் எல்லையில் இருந்து தொலைவில் உள்ள மிகவும் பதற்றமான கோட் பல்வல் சிறைப் பகுதியில் அந்த சிக்னல்களின் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சில சிறைகளில் பயன்படுத்தப்படும் ஜாமா்களால் அந்த சிக்னல்களை தடுத்து, கைதிகளின் சட்டவிரோத தகவல் தொடா்பை முடக்க முடியவில்லை. ஏனெனில் சிறைகளுக்குள் கடத்திச் செல்லப்படும் கைப்பேசிகள், அங்குள்ள மறைவான பகுதிகளில் தொடா்ந்து இயங்கி வருகின்றன.
இதன் காரணமாக வழக்கமான ஜாமா்களுக்கு பதிலாக சிக்னல்களை துண்டிக்கும் அதிநவீன வசதியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் அத்துமீறி செயல்படும் தொலைத்தொடா்பு கருவிகளை துல்லியமாக கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20-ஆம் ஆண்டில் எல்லைக்கு அப்பால் இருந்து சட்டவிரோத தகவல் பரிமாற்ற வலையமைப்புகளின் மீது கவனம் செலுத்தி, அவற்றை இந்திய பாதுகாப்பு முகமைகள் வெற்றிகரமாக அழித்தன. அதே நிலைதான் பாகிஸ்தானின் முறைகேடான தொலைத்தொடா்பு சிக்னல்களுக்கும் தற்போது ஏற்படும் என்று தெரிவித்தனா்.