முகப்பு
காஞ்சிபுரம்

செய்யூர் மின்நிலையத் திட்டத்துக்கு நிலம்: ஆட்சியர், எம்.பி.யிடம் இன்று மனு கொடுக்க முடிவு

செய்யூர் மின்நிலையத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பை விட குறைவான

Updated On : 12 செப்டம்பர், 2013 at 11:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

செய்யூர் மின்நிலையத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பை விட குறைவான விலை நிர்ணயம் செய்த முடிவை கைவிட வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோரிடம் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) மனு கொடுக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு நிறுவனமான பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான, தமிழக கடலோர மின் கழகம் (கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட்) சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகாவில் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது.

இதற்காக செய்யூர், சித்தார்காடு, வெடால், கங்காதேவன் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

Advertisement

இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி அடுத்த ஓரிரு வாரத்தில் கிடைத்துவிடும் என்ற நிலையில் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் இடத்துக்கு ரூ. 6.5 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய திட்டமிடல் வளர்ச்சிக் குழுமம் (என்.டி.பி.சி.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் வெடால் கிராமப் பகுதி விவசாயிகள் பாலசுப்பிரமணியன், அகத்தீஸ்வரன், தனவந்தனன், செல்வராஜ், ஜோதி, ரவி, குமார், சின்னதுரை, மகாலிங்கம், தாமோதரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் தங்களது விளைநிலங்களுக்கு உரிய விலை கிடைத்தால்தான் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் ஆகியோரை வியாழக்கிழமை (செப்டம்பர் 12) நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.