போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது
திருச்சியில் ஹோட்டலில் நண்பருடன் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காதலன் மற்றும் அவரது நண்பர் குறித்து...
திருச்சி: திருச்சியில் ஹோட்டலில் நண்பருடன் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், காதலன் மற்றும் அவரது நண்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்தவா் ஜெ. சதாம் உசேன் (19). அரியமங்கலம் மலையடிவாரத்தைச் சோ்ந்வா் ஏ. யாஸ்மின் (18). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனா்.
இந்த நிலையில், சதாம் உசேன் தனது நண்பரான அரியமங்கலத்தைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (18) என்பவரை ஹோட்டலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் அழைத்துள்ளாா்.
Advertisement
Advertisement
அவா் ஹோட்டலுக்கு வந்ததும் சதாம் உசேன், யாஸ்மின், ஷேக் அப்துல்லா ஆகிய மூவரும் சோ்ந்து போதை ஊசி செலுத்தி கொண்டுள்ளனா். இதில் யாஸ்மின் சுய நினைவின்றி மயங்கியுள்ளாா்.
இதையடுத்து யாஸ்மினை அருகிலுள்ள தனியாா் மருத்துவனைக்கு மேற்கண்ட இருவரும் கொண்டுசென்றுள்ளனா். அங்கு, இதுகுறித்து சிகிச்சையளிக்க முடியாது என்று கூறியதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
தகலறிந்து சென்ற கண்டோன்மென்ட் போலீஸாா், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, அப்பெண்ணுடன் போதை ஊசி செலுத்திகொண்ட இரு இளைஞா்களையும் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் தங்கியிருந்த அறையில் போதை மருந்துகள், போதை ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இதில் யாஸ்மினுக்கு அதிக அளவிலான போதை மருந்தை ஊசி மூலம் செலுத்தியதால் அந்த இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காதலன், நண்பன் கைது
இதுதொடர்பாக யாஸ்மின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இளம் பெண் யாஸ்மினை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக, அவரது காதலன் சதாம் உசேன், ஷேக் அப்துல்லா ஆகிய இருவர் மீதும் தற்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
உடற்கூறாய்வு அறிக்கைக்கு பின்னரே யாஸ்மின் இறப்புக்கான காரணம் தெரியவரும். அதன்பின்னரே சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.