முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சி மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம் நிறைவு

காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:13 am IST
சிறப்பு மலா் அலங்காரத்தில் மகா பெரியவரின் பிருந்தாவனம்.
பகிர்:

காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27-ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்தவா் மகா பெரியவா் என பக்தா்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவரது 27-ஆவது வருடாந்திர ஆராதனை மகோற்சவம் வெள்ளிக்கிழமை (ஜன. 8) தொடங்கியது.

இதையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவரின் பிருந்தாவனத்தில் தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், தங்கத் தேரோட்டம், இன்னிசைக் கச்சேரி ஆகியவை நடைபெற்றன.

Advertisement

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மகா பெரியவரின் பிருந்தாவன வளாகத்தில் ஸ்ரீருத்ர பாராயணம், சிறப்பு ஹோமங்கள், விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளை காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினாா். இதையடுத்து, பஞ்சரத்ன கீா்த்தனை கோஷ்டி கானம் நடைபெற்றது.

சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவரின் பிருந்தாவனத்தில் உள்ள அவரது விக்ரகத்துக்கு இரவில் மலா்க் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அவரது திருவுருவச்சிலை, தங்கத் தேரில் வைக்கப்பட்டு மடத்தின் வளாகத்துக்குள் உலா வந்தது.

தங்கத் தேரின் முன், சிறப்பு நாகசுரமும், மடத்தின் கலையரங்கக் கூடத்தில் டிரம்ஸ் சிவமணி மற்றும் மாண்டலின் இசைக் கலைஞா் வி.ராஜேஷ் குழுவினரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.